Thursday, August 04, 2005

சாதி என்றொரு மாய்ப்பிசாசு

காஞ்சி பிலிம்ஸ் "இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு?" என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த போது எழுத நினைத்தவை இவை.

இட ஒதுக்கீட்டை விட்டு விடுவோம். என் மனதுள் எழும் கேள்வி இதுதான்.

பிறப்பால் ஒரு மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிப்பது சரியா?

இக்கேள்வியை எழுப்பிய உடனே இணையத்தில் அதிகமாக எழுதிவரும் சில நடுநிலைவாதிகள்(?), நாங்களும் அதைத்தான் சொல்லி வருகிறோம் என்று விளம்புவார்கள்.

ஆனால் அவர்களின் எத்தனை பேர் தங்களின் உள்மனதில் "தாங்கள் உயர்ந்தவர்கள்" என்ற எண்ணம் இல்லாமலிருப்பவர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் எழுத்தை தொடர்ச்சியாக வாசித்த போதுதான் தெரிகிறது அவர்கள் ஆங்காங்கே அவர்களையறியாமல்(?) வெளிப்படுத்தும் அந்த உயர்வு மனப்பாண்மை.

நான் பிராமணனகாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று டோன்டு ஒரு பதிவில் கூறினார்(சமீபத்தில்தான் படித்தேன்). இதில் பெருமையடைவதிற்கு என்ன இருக்கிறது.
இதேபோல் நான் ஒரு பள்ளனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் பறையனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று கூற முடியமா? அப்படியே கூறினாலும் மக்கள் ஒரே அளவுகோலில் பார்ப்பார்களா?
இதையும் சொல்லிவிட்டு நான் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை என்று கூறுகிறீர்களே இது உங்களுக்கு நெருடலாயில்லை? இந்த ரெண்டு விஷயத்தில் எதோ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்.
அதை மட்டும் சொல்லிவிடலாமே.
மனதுக்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதைவிட நினைத்ததை நேரிடையாகவே சொல்லிவிட்டால் குறைந்தபட்சம் உங்களின் மனதுக்காவது துரோகம் பண்ணாத பெருமை கிடைக்கும்.

சாதி பற்றி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் கருத்தை கூறுங்கள் அல்லது அதைப்பற்றி எழுதாமலே விட்டுவிடுங்கள். அதைவிட்டுவிட்டு ஆதரிக்காமாதிரி எதுக்கறது, எதிர்க்கிற மாதிரி ஆதரிக்கறது என்ற அறிவுஜீவி முயற்சிகள் வேண்டாம்.

(பி.கு:- இந்த பதிவுலும் அனானிமஸ் பின்னுட்டங்களுகான வசதியை எடுத்துவிட்டேன், ஏனென்றால் முகம் தெரியாமல் வந்து ஒருவரை வசைபாடுவது எனக்கு பிடிக்காது. அதற்கு பின்னூட்டங்கள் ஒன்றும் வரமாலிருப்பதே மேல்)

10 comments:

Vetri Thirumalai said...

இது டோண்டு அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக போடப்பட்ட பதிவல்ல. அவராவது பரவாயில்லை ஒரு முறை நேரிடையாக நான் பெருமையடைகிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் நிறையபேர் தங்களின் வார்த்தஜாலங்களால் அதை அழகாக மறைபொருளில் உண்ர்த்துகிறார்கள். அவர்கள் தங்கள் சுயத்தை ஒருமுறை தட்டிப்பார்க்க போடப்பட்ட பதிவே இது

மாயவரத்தான் said...

//ஆனால் நிறையபேர் தங்களின் வார்த்தஜாலங்களால் அதை அழகாக மறைபொருளில் உண்ர்த்துகிறார்கள். //

வெற்றி திருமலையாரே.. அப்படியே அவர்களும் யார் யார் என்று எடுத்து கூறி நீங்களாவது உங்கள் 'நடுநிலைமையை' காட்டியிருக்கலாமே?! நான் உங்களை கிண்டலடிப்பதற்காக கூறவில்லை. இந்த மாதிரியான சாதி பற்றிய பதிவுகள் என்றால் ஏன் எல்லாருமே ஒரு குறிப்பிட்டவர்களை மட்டும் உதாரணம் காட்ட பயன் படுத்துகிறீர்கள்?

dondu(#11168674346665545885) said...

"நான் பிராமணனாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன் என்று டோண்டு ஒரு பதிவில் கூறினார்(சமீபத்தில்தான் படித்தேன்). இதில் பெருமையடைவதிற்கு என்ன இருக்கிறது."

சமீபத்தில்தானே படித்தீர்கள். அதில்தான் காண்டக்ஸ்டை கூறியிருந்தேனே. அதற்குள் மறந்து விட்டீர்களா? பரவாயில்லை, மறுபடி நினைவுபடுத்துகிறேன். இப்போது தமிழகத்தில் பார்ப்பனர்களை ஏளனமாகவே பார்க்கிறார்கள். எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற முறையில் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பல பார்ப்பனர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்கிறார்கள். நம் இணையத்திலேயே பல பார்ப்பனர்கள் ஒரு படி மேலே சென்று பார்ப்பன எதிர்ப்பு எழுத்துக்களை அவர்களே எழுதி வருகிறார்கள். என்னுடைய கோபம் முக்கியமாக அவ்வாறான பார்ப்பனர்கள் மீதுதான். அவர்களுக்காகத்தான் நான் பார்ப்பனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் என்று முழக்கமிட்டேன்.

இப்போது ஒருவன் தான் பார்ப்பனன் என்று கூறிக் கொள்வது ஒரு முட்கிரீடத்தை அணிவது போலத்தான். அதை நான் என் சாதிக்காக பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக அதற்கும் சேர்த்து பெருமை அடைகிறேன் என்று இன்னொரு முறை கூறிவிட்டுப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

வெங்காயம் said...

//இப்போது தமிழகத்தில் பார்ப்பனர்களை ஏளனமாகவே பார்க்கிறார்கள். எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற முறையில் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பல பார்ப்பனர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்கிறார்கள்.//

டோண்டு ஐயா அவர்களின் ஆதங்கத்திற்கு மதிப்பளிக்கிறேன். அதே சமயம் நம்முடைய கேள்வி எல்லாம் இட ஒதுக்கீடு காரணமாக பிராமனர்களின் அவர்களின் மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டதா? ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா?

இட ஒதுக்கீடு என்பது எங்கள் உரிமையை நாங்கள் அடைய அரசு எங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ள ஒரு வழி. மாறாக உங்கள் உரிமையை நாங்கள் எங்குமே பறித்ததில்லை. பிராமனர்களை ஒதுக்கி வைக்கும் அளவு எங்கள் நிலை இன்னும் உயரவில்லை. அப்படியே உயர்ந்தாலும் இதுபோன்ற கேவலமான வேலைகளை நாங்கள் செய்ய மாட்டோம்.

மதக்கோட்பாடுகள் என்ற அடிப்படையில் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஏளனமாகப் பார்க்கப்படுவது என்பதையும் தாண்டி இதுவரை கேவலமாக நடத்தப்பட்டே வருகிறார்கள்.

உங்களுக்கு மட்டும்தான் ஆதங்கம் இருக்க வேண்டுமா? பிற்படுத்தப் பட்ட ஜாதியில் பிறந்த நாங்கள் ஆதங்கப்படக் கூடாதா?

Vetri Thirumalai said...

டோண்டு அவர்களே என் வயதை விட உங்கள் அனுபவம் அதிகம். பல தேசங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள். உங்களை போன்றவர்களிடமிருந்து சாதிசார்பைவிட மனிதசார்பை எதிர்பார்க்கும் உரிமையும் எங்களுக்கு இருக்கிறது அந்த தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்களே இப்படி விடாப்பிடியாக இருந்தால் இளைய சமுதாயம் எப்படி விழிப்புணர்வு பெறும்.
உங்களின் எண்ணங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்து பாருங்கள் அதில் தெரியும் ஒடுக்கப்பட்டவர்கள் நீங்களா அல்லது நாங்களா என்று.
Empathy என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியும். ஒடுக்கப்பட்டவர் இடத்திலிருந்து அதை Empathise பண்ணிப்பாருங்கள் அப்பொழுது தெரியும் எங்களின் வேதனை.

dondu(#11168674346665545885) said...

"டோண்டு ஐயா அவர்களின் ஆதங்கத்திற்கு மதிப்பளிக்கிறேன். அதே சமயம் நம்முடைய கேள்வி எல்லாம் இட ஒதுக்கீடு காரணமாக பிராமனர்களின் அவர்களின் மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டதா? ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா?"

பிரதிநிதித்துவம் குறைந்ததாக எங்கே கூறினேன். பார்ப்பனர்கள் எதிர்கொள்ளும் அவர்களை சிறுமை படுத்தும் முயற்சிகளை பற்றித்தான் எழுதினேன். அதே சமயம் யார் தலைகீழாக தன்ணி குடித்தாலும் பார்ப்பனர்கள் படித்து முன்னேறுவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளேனே. இட ஒதுக்கீடு இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்றுவிடுவோம் என்றும் எழுதினேனே. வேறு மாநிலங்கள், வேறு தேசங்கள் என்றெல்லாம் சென்று விட்டோம். என் பதிவு "சில வெளிப்படையான எண்ணங்கள்"-ல் இதையெல்லாம் எழுதியுள்ளேனே.

வெற்றி திருமலை அவர்களே, மனிதசார்பு எங்களிடம் இல்லையென்று யார் சொன்னது? சமுதாய சீர்திருத்த வாதிகள் எங்கள் சாதியிலும் பலர் இருக்கின்றனர். நானே தலித்துகள் இரட்டை தம்ளர் முறையை எப்படிக் கையாளலாம் என்பதற்கு தனிப் பதிவே போட்டுள்ளேன். என்னுடைய ஏதேனும் ஒரு பின்னூட்டத்தில் நாங்கள்தான் உயர்ந்த சாதி என்று எங்காவது கூறியிருக்கிறேனா? என் சாதியில் பெருமையடைகிறேன் என்று கூறியது எங்களை மட்டம் தட்டும் செயல்பாட்டிற்கு ஒரு எதிர்வினை மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. நான் வெளிநாடு எங்கும் சென்றதில்லை.

துளசி கோபால் said...

ஏங்க,

பழையபடி சாதிச் சண்டை ஆரம்பிக்குதா?

எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.

பிராமணர்களிலேயும் நாளைக்கு 'புவ்வா'வுக்கு வழி இல்லாமக் கஷ்டப்படற குடும்பங்களும்
இருக்காங்க. மற்ற ஜாதிகளிலும் பத்துத் தலைமுறைக்குச் சொத்து சேர்த்துவச்சுக்கிட்டும்
பிற்பட்டவர்களுக்கான சலுகையைக் கேக்கறவங்களும் இருக்காங்க.

அதனாலே இந்த ஜாதி அடிப்படையிலே எல்லாத்தையும் பாக்கறதை விட்டுட்டுப் பொருளாதார
அடிப்படையிலே இல்லாதோர், இருப்பவர்ன்னு பார்த்து அவுங்களுக்குச் சலுகை தரணுமுன்னு
நான் விரும்பறேன்.

( இதுலேயும் கள்ள சர்டிஃபிகேட் வாங்காம எல்லோரும் நேர்மையா இருக்கணும்!)

துளசி.

வெங்காயம் said...

//பிரதிநிதித்துவம் குறைந்ததாக எங்கே கூறினேன்.//

பிராமனர்களின் பிரதிநிதித்துவம் குறையவில்லை என்று ஒத்துக் கொண்ட டோண்டு ஐயாவுக்கு நன்றி.

//அதே சமயம் யார் தலைகீழாக தன்ணி குடித்தாலும் பார்ப்பனர்கள் படித்து முன்னேறுவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளேனே. இட ஒதுக்கீடு இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்றுவிடுவோம் என்றும் எழுதினேனே. வேறு மாநிலங்கள், வேறு தேசங்கள் என்றெல்லாம் சென்று விட்டோம்.//

உண்மைதான் டோண்டு ஐயா அவர்களே. இவ்வாறு செல்வதற்கு பார்ப்பனர்களால் மட்டுமே முடிகிறது.

//பிராமணர்களிலேயும் நாளைக்கு 'புவ்வா'வுக்கு வழி இல்லாமக் கஷ்டப்படற குடும்பங்களும்
இருக்காங்க//

பிராமனர்கள் அனைவருமே மிக உயர்ந்த நிலையில் உள்ளார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் மிக தாழ்ந்த நிலையில் உள்ளார்கள் என்று நான் கூறவில்லை. நீங்கள் கூறுவதை நான் ஒத்துக் கொள்கிற அதே சமயம், ‘புவ்வாவு’க்கு கஷ்டப்படுகிற குடும்பங்கள் பிரமனர்களில் 10 சதவீதம் என்றால், தாழ்த்தப்பட்டவர்களில் 50 சதவீதமாவது இருக்கிறது என்பதே என் வாதம்.

அது மட்டுமின்றி இங்கு தாழ்த்தப்படுதல் மத அடிப்படையில், வேத இதிகாசங்களின் அடிப்படையில் இருப்பதால் அவை இருக்கும் வரை இட ஒதுக்கீடு அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

"சாதிகளைப்பற்றி யார் எழுதினாலும் அங்கு போய் சிலர் உங்கள் இருவரையும் பற்றி தரக்குறைவாக கிறுக்கிவிடுகின்றனர். என் பதிவில் அது வேண்டாம் என்றுதான் இந்த விஷயம்."

சிலர் எல்லாம் இல்லை. அவர் ஒற்றை ஆள்தான். யார் என்று எல்லோருக்கும் தெரியும். போலி டோண்டுதான் அது.

அன்புடன்,
டோஒண்டு ராகவன்

ஐயங்கார் said...
This comment has been removed by a blog administrator.